
புதிதாக வேலை தேடுபவர் களுக்கு இன்டெர்வியூ ஒரு கிலி தரும் விஷயமென்றால், இன்னும் சில பேருக்கு நான்கு பேர் முன்பு நின்று உரை நிகழ்த்துவது ஒரு பேரிடியான விஷயம். நண்பர்கள் குழுவில் சர்வ சாதாரணமாக ஒரு மணி நேரம் வரை பேசக்கூடிய நம்மால் நான்கு பேர் முன் ஏன் ஐந்து நிமிடம்கூட உரை நிகழ்த்த முடியவில்லை?
மார்க்கெட்டிங், கன்சல்டிங் போன்ற துறைகளில் வேலைக்குத் தேர்வு நடத்தும்போது விண்ணப்பித்தவர்களை சிறிய உரை நிகழ்த்த சொல்வதுண்டு. இதை ஜாப்டாக், ஜாப் பிரசன்டேஷன் என்று சொல்வார்கள். இதன் நோக்கம் உங்கள் துறையில் உங்களுக்கு ஆழ்ந்த புரிதல் இருக்கிறதா? நீங்கள் அறிந்த விஷயத்தை மற்றவர்களிடம் எளிமையாக விளக்கும் திறன் உள்ளதா? உங்கள் பேச்சுத்திறன் எப்படியுள்ளது என்பதை அறிந்து கொள்வதே. எனவே, சரியாக தயார் செய்தால் இதில் கண்டிப்பாக அசத்திவிடலாம். இந்த பிரச்னையை எப்படி கடந்து வரலாம் என இப்போது பார்க்கலாம்.
1. கருத்து (Content): உங்கள் உரை சிறப்பானதாக இருக்க நீங்கள் பேசவிருக்கும் தலைப்பில்
உங்களுக்கு ஆழ்ந்த அறிவும், புரிதலும் இருப்பது மிக அவசியம். எனவே, தலைப்பை தேர்ந்தெடுக்கும் சாய்ஸ் தரப்பட்டால் உங்கள் துறையில் உங்களுக்கு நன்றாகத் தெரிந்த, கேட்பவர் ஆவலைத் தூண்டும் தலைப்பை தேர்ந்தெடுங்கள். நீங்கள் பேச வேண்டிய தலைப்பில் நீங்கள் உறுதியாக இருந்தால் உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும். அதனால் மேடைப் பயமும் போய்விடும்.
2. கேட்பவர்கள் (Audience): உங்கள் உரையை தயார் செய்யும் முன்பு உங்கள் பேச்சை கேட்கப் போகிறவர்கள் யார் என்பதை அறிந்து கொள்வது அவசியம். உங்கள் உரையை எத்தனை பேர் கேட்கப் போகிறார்கள், அவர்கள் எந்தெந்த பதவியைச் சார்ந்தவர்கள், அவர்கள் புரிந்துகொள்ளுதல் அளவு என்ன? போன்ற விஷயங்கள் தெரிந்திருந்தால், அதற்கேற்ப உங்கள் உரையை தயார் செய்ய முடியும்.
3. உங்கள் நிறை-குறைகள்: உரை நிகழ்த்தும் முன், மொழி அறிவு பேச்சுத்திறன் தொடர்பான உங்கள் நிறை-குறைகள் என்ன என்பதை அறிந்து கொள்ளுங்கள். நண்பர்கள், ஆசிரியர்கள் முன் பேசி ஒத்திகை பார்த்துக் கொள்வது நல்லது. எந்தெந்த வார்த்தைகளில் உங்கள் உச்சரிப்பு சரியில்லை; எந்த வாக்கிய அமைப்பு சரியில்லை; உங்கள் உடல்மொழி எப்படியுள்ளது என்பதை அறிந்து கொண்டு, அவற்றில் திருத்தம் கொண்டுவர இந்த ஒத்திகை உதவும். உங்கள் பதற்றமும் குறையும்.
4. நீங்கள் பயன்படுத்தப் போகும் கருவிகள்: உங்கள் உரையை நிகழ்த்த நீங்கள் பயன்படுத்தப் போகும் கணினி, குறுந்தகடு, பென்டிரைவ், பவர்பாயின்ட், புரஜெக்டர் போன்றவை சரியாக உள்ளதா என்பதை முன்பே சரி பார்ப்பது அவசியம். இதன் மூலம் கடைசி நேர பிரச்னைகளையும், அதனால் ஏற்படும் பதற்றத்தையும் தவிர்க்க முடியும். முடிந்தவரை பவர் பாயின்ட் பிரிண்ட் செய்து ஹார்ட் காப்பியாகவும் எடுத்துச் செல்வது நல்லது.
மேலும் கவனிக்க வேண்டியவை...
உங்கள் உரையை பகுதிகளாகப் பிரித்துக் கொண்டு, ஒவ்வொரு பகுதிக்கும் எவ்வளவு நேரம் செலவிட வேண்டும் என முன்பே முடிவு செய்து கொள்ளுங்கள். மையக் கருத்தை (Central theme) விளக்க அதிக நேரம் ஒதுக்குங்கள்.

பவர்பாயின்ட் உபயோகிக்கும்போது சரியான ஸ்லைட் பேக்கிரவுண்ட், ஃபாண்ட் தேர்ந்தெடுப்பது அவசியம். பின்னணி நிறத்துக்கு கான்டிரஸ்ட் நிறமுடைய ஃபான்ட்களை உபயோகிப்பது நல்லது. நீங்கள் சொல்ல வேண்டிய எல்லாக் கருத்தையும் ஒரே ஸ்லைடில் திணிக்காமல் முக்கியமான தகவல்களை மட்டும் பாயின்டுகளாக தரவும். தகவல்களை சுருக்கமாகத் தர எளிமையான கிராப் (graph) அல்லது டேபிள்களை பயன் படுத்தலாம். டேபிள்களில் நிறைய தகவல்கள் இருக்கும் பட்சத்தில் அவற்றை பிரின்ட் செய்து அனைவருக்கும் தரலாம். முடிந்தவரை குறைந்த அளவு ஸ்லைடுகளை பயன்படுத்தவும்.
உங்கள் உரையை துவங்கும் முன் உங்களை பற்றியும், நீங்கள் பேசப் போகும் தலைப்பு பற்றியும் சிறு அறிமுகம் தருவது அவசியம். அதேபோல் உரையை நிறைவு செய்ய முக்கியமான தகவல்களை சுருக்கமான முடிவுரையாக தரலாம்.
இடையிடையே கரும்பலகையை உபயோகிப்பது நல்லது. உங்கள் முக்கிய கருத்துக்களையோ, பார்வையாளர்கள் சொல்லும் விஷயங்களையோ கரும்பலகையில் வரிசைப்படுத்தலாம். இவற்றை முடிவுரைக்காக பயன்படுத்தலாம்.
நீங்கள் பேசும்போது ஒரே இடத்தில் பார்வையைச் செலுத்தாமல் எல்லோரை யும் பார்த்து, மலர்ந்த முகத்தோடும், புத்துணர்வோடும் பேசுங்கள். கைகளை கட்டிக்கொண்டோ, கால் சட்டை பாக்கெட்டில் கை வைத்துக்கொண்டோ பேசுவதைத் தவிருங்கள்.
பேசும்போது எளிமையான வார்த்தைகளைப் பயன்படுத்துங்கள். உங்கள் பேச்சு சுவாரஸ்யமாக இருக்க சிறு சிறு நகைச்சுவை உதாரணங்கள் தரலாம். பேச்சின் இடையே பார்வை யாளர்களின் கருத்தைக் கேட்பது அவர்கள் ஆர்வத்தையும் கவனத்தையும் அதிகரிக்கும். முடிந்தால் உங்கள் தலைப்பு தொடர்பான சிறு வீடியோக்களையும், புகைப்படங்களையும் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து காண்பிப்பது உங்கள் உரையின் தாக்கத்தை அதிகரிக்கும்.
(தயாராவோம்)
- பானுமதி அருணாசலம்
(நாணயம் விகடன்)