|
-பனசை நடராஜன், சிங்கப்பூர்

வருத்தமில்லை மகனிடம்
அவனது
நிராகரிப்பின் நியாயம்
புரிந்ததால்...
தோள் சுமந்து,
துரத்திச் சோறூட்டி,
சொல்லிச் சொல்லி
படிக்க வைத்து,
வளர்த்து உயர்த்திய
பிரியமான பெற்றோரையே
முதியோர் இல்லமென்ற
இருட்டுத் தனிமையில்
பிடித்துத் தள்ளிய எனக்கு
வருத்தமில்லை இப்போது...
ஊட்டுவது இருக்கட்டும்
உணவு உண்டாயா?
என்று கூடக் கேட்டதில்லை
என் மகனிடம் ஒருநாளும்...
பணம் துரத்தி ஓடியதில்-அவன்
படிக்கும் வகுப்பு கூட
பலமுறை மறந்து போகும்...
என் மனைவியின் நாட்களோ
பெரும்பாலும் தொலைகாட்சித்
தொடர்களிலேயே
தொலைந்து போகும்...
அதனால்தான்
அவள் இறந்து போன போது கூட
வருந்தி விட்டு
வர இயலாத சூழல் என்றான்
வெளிநாட்டிலிருந்து..!
அக்கறையாய் அவனை
அரவணைத்திருந்தால்
அனிச்சையாய் அன்பு
பெருக்கெடுத்திருக்கலாம்...
இப்போது
வருத்தமில்லை...
அவனது நிராகரிப்பின்
நியாயம் புரிந்ததால்!
|