இதம் மறந்த இயல்புகள் - ராமலக்ஷ்மி

-ராமலக்ஷ்மி, பெங்களூர்.

மற்றவரை மட்டம் தட்டுவதில்
மனிதமனம் அடையுது குதூகலம்

ஒருவர் எட்டி மிதித்ததாலே
இமயமலையின் உச்சி சரிந்ததாய்
இல்லை ஏதும் சரித்திரம்

துரும்பெனப் பரிகசிக்கப்பட்டவர்
இரும்பை விட உறுதியாய்
முன்னேறிய கதைகளோ
வரலாற்றில் ஆயிரம்

இளக்காரங்களால்
எவர் தரமும் தாழ்ந்ததில்லை
இகழ்ந்தவரும் உயர்ந்ததில்லை

தெரிந்தாலும்
தேன்குடித்த வண்டு போல
இன்பங்கண்ட உள்ளங்கள்
தொடர்கின்றன களிப்பாக
இதிலென்ன பாவமென
இல்லை பெருங்குற்றமென

*
சடசடவென்று
சன்னல் கதவுகளை விடாது தட்டி
இடிமின்னலுடன்
அடித்துப் பெய்தது கோடைமழை

சீறிய இயற்கை
பார் என்றழைக்க
சிந்தனை கலைந்து நின்றது ஆய்வு

இதம் மறந்த புயல்காற்றால்
முற்றமெங்கும் இறைந்து கிடந்த
தடித்த பெரும் ஆலங்கட்டிகள்
பளபளத்துத் தெரிந்தன ஏனோ
பண்பு துறந்த ஏளனங்களாய்

நிமிடத்தில் கரைந்து
அடையாளம் தொலைத்தாலும்
அடங்கோம் யாமென
நிற்காத அடைமழையினூடே
கெக்கலிப்பாய் சேதி சொல்லி.

*


Tamil English  
(tamil typing : ammaa = அம்மா, vikatan = விகடன்)
 Name
  E-Mail
  Comment
(குறிப்பு: தங்கள் கருத்து பதிவுக்கு நன்றி. நெறியாளர் பார்வைக்கு பிறகே பதிப்பிக்கப்படும். காத்திருக்கவும்)
For contents & Feedback: youthful@vikatan.com I For technical issues : webmaster@vikatan.com I For Advt: dotcom@vikatan.com
Copyright © 2008 Vikatan.com Pvt Ltd. all rights reserved.