|
மாஸ்கோ, மே 7,2010
இந்திய மணற்ச் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக்குக்கு, ரஷ்யாவில் நடந்த உலக மணற்ச் சிற்பக் கலைப் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது.
சுதர்சன் பட்நாயக்... ஒரிசா மாநிலம் பூரியைச் இந்த மணற்ச் சிற்பக் கலைஞனுக்குத்தான் உலகம் முழுவதும் ரசிகர்கள். மனிதர்களை மகிழ்விக்கும் சந்தோஷ நிகழ்வாகட்டும், மனிதத்தைப் பாதிக்கும் பாதக சம்பவமாகட்டும் உடனடியாக தனது கலைத்திறன் மூலமாக மக்களின் உணர்வுகளைப் பதிவு செய்பவர் சுதர்சன் பட்நாயக்.
சுனாமியின் சீற்றம் தொடங்கி சச்சினின் சாதனை செஞ்சுரி வரை பூரி கடற்கரையில் இவர் உருவாக்கும் மணற்ச் சிற்பங்கள், மக்களின் மனசைப் பிரதிபலிப்பாகவே அமையும். குறிப்பாக, சமூக விழிப்பு உணர்வுக்கு முக்கியத்துவம் தரப்படுவதாக இருக்கும். அதுவே, அவரது உலகப் புகழுக்குக் காரணமாகவும் இருக்கின்ற அம்சம்.
பூரி கடற்கரையில் மணல் சிற்பப் பள்ளியையும் நடத்தி வரும் இவர், ரஷியாவின் தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்ற 'உலக சினிமாவும் கலைஞர்களும்' என்ற தலைப்பிலான இரண்டாவது உலக மணற்ச் சிற்பப் போட்டியில் கலந்துகொண்டார்.
இதில், 'ராஜ்கபூர், இந்திய - ரஷ்ய உறவின் அடையாளம்' என்ற கருப்பொருளில், 'மேரே நாம் ஜோக்கர்' படத்தில் வரும் ராஜ்கபூரின் தோற்றத்தை அப்படியே மணற்ச் சிற்பமாக்கினார் சுதர்சன். இந்தப் படைப்புக்கே மக்களிடம் அமோக வரவேற்பு கிடைத்தது.
இறுதியில், பார்வையாளர்களிடம் இருந்து அதிக வாக்குகளைப் பெற்று தங்கப் பதக்கத்தைத் தட்டிச் சென்றார் சுதர்சன்.
ரஷ்யாவில் நடந்து முடிந்த இப்போட்டியில் அமெரிக்கா, இங்கிலாந்து, இத்தாலி உள்ளிட்ட 11 நாடுகளைச் சேர்ந்த பிரபல கலைஞர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
கடந்த ஆண்டு நடந்த முதற்ப் போட்டியில், தாஜ்மஹாலை மணற்ச் சிற்பமாக வடிவமைத்த சுதர்சனுக்கு சிறப்புப் பரிசு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, பெர்லினில் நடைபெற்ற உலகப் போட்டியில் 'புவி வெப்பமடைதல்' குறித்த விழிப்பு உணர்வை ஏற்படுத்தும் வகையிலான இவரது படைப்பு வெகுவாக பாராட்டைப் பெற்றதும் இங்கே நினைவுகூரத்தக்கது.
|