|
ஜூலை 14,2010
மும்பை - இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி (ஐ.ஐ.டி.) உதவிப் பேராசிரியர் ஆகியிருக்கிறார், 22 வயது இளைஞர் ததாகத் அவ்தார் துள்சி.
இதன் மூலம், நாட்டின் மிக இளம் வயது ஐ.ஐ.டி. பேராசிரியர் என்ற சிறப்பைப் பெற்றிருக்கிறார், இந்த பீகார் இளைஞர்.
டாக்டர் துள்சி அடுத்த வாரம் இயற்பியல் துறையின் உதவிப் பேராசிரியராக சேருவார் என்று மும்பை ஐ.ஐ.டி. தெரிவித்துள்ளது.
22 வயதிலேயே உதவிப் பேராசிரியர் பணி. அதுவும், ஐ.ஐ.டி.யில். எப்படி சாத்தியமாயிற்று துள்சிக்கு?!
ஒன்பது வயதில் உயர் நிலைப் பள்ளிப் படிப்பை முடித்தார், 10 வயது பி.எஸ்சி பட்டம் பெற்றார், 12 வயதில் எம்.எஸ்சி பட்டம் பெற்றார்...
'குவாண்டம் கம்ப்யூட்டிங்' என்ற தலைப்பில் ஆராய்ச்சி செய்து 21 வயதில் பெங்களூர் ஐ.ஐ.டி.யில் முனைவர் பட்டம்!
இவரது அபார அறிவாற்றலைக் மும்பை ஐ.ஐ.டி., உதவி பேராசிரியராக பணிபுரிய அழைப்பு விடுத்தது.
கனடா நாட்டில் உள்ள வாட்டர்லூ பல்கலைக்கழகத்தில் இருந்தும் நல்ல சம்பளத்துடன் அழைப்பு வந்தது...
ஆனால், மும்பை ஐ.ஐ.டி.யை டிக் செய்திருக்கிறார், துள்சி!
காரணம் கேட்கப்பட்டதற்கு, "இந்தியாவில் பணிபுரிய வேண்டும் என்பதே எனது விருப்பம். ஆய்வு போன்ற காரணங்களுக்காக வெளிநாடு போகலாம். ஆனால், வேலை என்றால் அது இந்தியாவில் தான் என்று சிறு வயதிலேயே முடிவெடுத்துவிட்டேன். வேறு எதுவும் காரணமல்ல. மும்பை ஐ.ஐ.டி., உலகப் புகழ் பெற்ற கல்வி நிறுவனம். மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது," என்றார் அவர்.
கடந்த 2001 ஆம் ஆண்டில், ஜெர்மெனியைச் சேர்ந்த அறிவியல் மற்றும் தொழிநுட்ப துறை சார்ந்த ஆய்வுக் குழுவின் மூலம் 'போலி மேதை' என்று முத்திரைக் குத்தப்பட்டார், ததாகத்.
அது, 13 வயது சிறுவனாக இருந்த ததாகத் துள்சிக்கு மிகுந்த அழுத்தத்தை தந்தது. எனினும், அதில் இருந்தெல்லாம் மீண்டு வந்து இப்போது தாம் ஒரு மேதை என்பதை நிரூபித்திருக்கிறார்.
அப்போது என்னை விமர்சித்தவர்களுக்கு இப்போது உரிய பதில் தந்துள்ளேன் என்று குறிப்பிட்டுள்ள ததாகத் துள்சி, "சாதனைகள் எதுவும் என் கனவல்ல. சிறுவயதில் இருந்தே நோபல் பரிசை வெல்ல வேண்டும் என்பதே என் கனவாக இருக்கிறது. சில அறிவியல் ஆய்வுகளை செய்யத் தொடங்கியிருக்கிறேன். நிச்சயம் நோபலை வெல்வேன்," என்றார் நம்பிக்கையுடன்.
கடந்த 2003 ஆம் ஆண்டு, துள்சிக்கு புகழாரம் சூட்டியது, 'டைம் இதழ்'...
"தி மோஸ்ட் கிஃப்டட் யங்ஸ்டர்" என்பதே அந்தக் கெளரவம்!
|