| - தேவராஜ் விட்டலன்
வழக்கம்போல் தான் அன்றைய அதிகாலையும் முனியாண்டிக்கு விடிந்தது. தொழுவத்தில் கட்டியிருந்த மாடுகளுக்கு தண்ணீர் காட்டி பெருக்கி துப்பரவு செய்தான். பிறகு, சொசைட்டி பால்பாண்டி வந்ததும் மாட்டிலிருந்து பால் கறந்து விட்டு, பரணில் வைத்திருந்த ஒரு வெள்ளை ஷூவை எடுத்து காலில் போட்டுகொண்டான்.
அவனுக்கு பழைய நினைவுகள் வந்து சென்றது.
பட்டாளத்துக்கு போக வேண்டுமென்ற தன் சிறுவயது கனவு... அதற்காக தேர்வுக்கு போகும்போதெல்லாம் ஓட முடியாமல் தோல்வியடைந்து வருவது... போன முறை பக்கத்து வீட்டு பட்டாள முருகன் அண்ணன் ஆறுதல் சொன்னது... அதனோடு தன்னுடைய பழைய ஷூவை கொடுத்து ஓடிப் பழகச் சொன்னது... எல்லாமே மனதில் வந்து சென்றது.
பரபரப்போடு தன் குடிசையில் இருந்து வெளியேறினான்.
மார்கழி மாதம் என்பதால் குளிர் நெஞ்சை தொட்டுச் சென்று கொண்டிருந்தது. பக்கத்து வீட்டு தாத்தா எழுந்து, "எவண்டா அவன் நாலு மணிக்கு சுத்திட்டு திரியறவன், தூக்கங் கெட்ட பய" என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டார்.
தெருவில் படுத்துக் கொண்டிருந்த கறுப்பு நாய் "லொள் லொள்" என குரைக்க தொடங்கியது.
முனியாண்டியின் மனதில் 'அடுத்த தடவ எப்படியும் ஓடி பட்டாளத்துல சேந்து முருகன் மாமா மாதிரி ஜம்முன்னு வரணும். அப்பதாண்ட நமக்கு மதிப்பு,' என எண்ணி கொண்டே காற்றை கிழித்தபடி ஓடத் தொடங்கினான்.
நாய் இன்னும் 'லொள் லொள்' என குரைத்துக் கொண்டுதான் இருந்தது.
அவன் மனதின் கலர் கனவுகள் அந்த இருட்டையும் வெளிச்சமாக்கி கொண்டு இருந்தது.
|