- கவிநயா
தலையில் எழுதிய எழுத்துக்கள்
தானாய் இறங்கி வந்து
மூளையை அணைத்து
முள்முத்த மிடுகின்றன...
நெஞ்சில் விழுந்த கீறல்கள்
நீண்டு திரிசூலங்களாகி
புதைத்து வைத்த பூகம்பங்களை
புரட்டிப் பார்க்கின்றன...
அக்கினிக் குஞ்சொன்று
அடிவயிற்றில் அமர்ந்து கொண்டு
தன்தணல் முட்டைகளை நொடிவிலகாமல்
அடைகாத்துக் கொண்டிருக்கிறது...
எங்கே சென்றாலும்
விடாக் கண்டனாய்
கூடவே வந்து தொலைக்கிறது மனசு..
தொலைக்க முடியாமல்..!
|