|
- என்.ராமநாதன்
"ஸாரி சார், எங்களால உங்க பொண்ண..." இழுத்தார் டாக்டர்.
"....." - அவர்
"சார்... சார்..." - டாக்டர்.
"இல்ல டாக்டர், அப்படி எல்லாம் ஒண்ணும் ஆகாது,"
"இல்ல சார், உங்க பொண்ணு இப்ப உயிரோட..."
"சொல்லாதீங்க."
"எமோஷன் ஆகாதீங்க சார், கன்ட்ரோல் யுவர்செல்ஃப்."
"நான் அழமாட்டேன், நான் அழுதா என் பொண்ணுக்கு பிடிக்காது... ஆனா அப்படிபட்ட பொண்ணு என்னை விட்டு பொயிட்டானு தெரிஞ்சப்பறம் எப்படி அழாம இருக்க முடியும்?!"
வெடித்து அழ ஆரம்பித்தார் அவர்.
*

"என் பேரு மித்ரா, இது என் அப்பா... பேரு பிரபாகரன். பிசினஸ் பண்றார். இவருக்கு தான் உடம்பு சரி இல்ல. அதான் ஹாஸ்பிட்டல் வந்தோம்.
"அப்பா அந்த டாக்ஸியை நிறுத்துங்க, அதிலே வீட்டுக்கு போயிரலாம்"
இவர்கள் ஏறியதும் டாக்ஸி நகர்ந்தது.
"டிரைவர், அந்த மெடிக்கல் ஷாப் கிட்ட கொஞ்சம் நிறுத்துங்க, மருந்து வாங்கணும்," - மித்ரா.
டிரைவர் பதிலேதும் பேசவில்லை.
அவள், "அப்பா நாளைக்கு நீங்க ஆஃபிஸ் போக வேண்டாம்."
"இல்லம்மா, என்னால லீவு போட முடியாது," என்றார் பிரபாகரன்.
"நான் சொன்னா சொன்னதுதான்," என்று சண்டையிட்டாள்.
இவர்கள் பேச்சை கேட்டபடி வண்டி ஓட்டிக் கொண்டிருந்தான், அந்த டிரைவர்.
மெடிக்கல் ஷாப் முன்பு வண்டி நின்றது. அவள் இறங்கிச் சென்றாள்.
"நீங்க ஒண்ணும் தப்பா நினைக்காதீங்க சார். என் பொண்ணுக்கு நான்னா ரொம்ப பிடிக்கும். அதனால தான்," - அந்த டாக்ஸி டிரைவரிடம் கூறினார் பிரபாகரன்.
அந்த டிரைவர் எந்த சலனமும் இன்றி வெறுப்போடு தலை ஆட்டினான்.
சிறிது நேரத்தில் அவள் கடையில் இருந்து திரும்பினாள். வண்டி நகர்ந்தது. வீடு செல்லும் வரை பிரபாகரன் ஏதும் பேசவில்லை.
அவர்கள் இறங்கியதும் அந்த டிரைவர் மீட்டர் பணத்தை பதிலேதும் பேசாமல் வாங்கிச் சென்றான். அவனது நடவடிக்கையை சிறிதும் விரும்பாத பிரபாகரன், அவனை மனத்துக்குள் திட்டியபடி வீட்டிற்குள் நுழைந்தார்.
அந்த டாக்ஸி நேராக டிரைவர் வீட்டின் முன் நின்றது.
"அய்யோ! என் பொண்ணு போயிட்டாளே," எனக் கதறிய படி ஒரு பெண் வீட்டினுள் இருந்து ஓடி வந்தாள். சிறிது நேரத்தில் ஒரு கூட்டம் அந்த டாக்ஸியை சூழ்ந்தது.
டாக்ஸியில் இருந்து இறங்கிய அந்த டிரைவர் காரின் டிக்கியை திறந்தான்.
உள்ளே அவன் மகளின் பதப்படுத்தப்பட்ட இறந்த உடல் இருந்தது.
* |