| |
- கோமதி நடராஜன்

யாருக்காகவும் எதுவும்,
இயங்காமல் நிற்பதில்லை.
தெரியாதா நமக்கு.?
யாருடைய இல்லாமையும்,
எதையும் நிறுத்தியதில்லை.
புரியாதா நமக்கு.?
வாழ்க்கையின் தத்துவம் விளக்கும்,
முத்தான சொற்றொடர் இது.
ஏற்க வேண்டியதுதான்!
யதார்த்தம் இதுவென்று கூறும்,
ஒளிவீசும் சொற் சுடர் இது.
மறுக்க முடியாததுதான்!
ஆனாலும், சமயத்தில்
மனதை விட்டு,
நழுவிச் செல்கிறதே!
ஏன்?
தேவையான போது,
தெரியாமல் போகிறதே!
எப்படி?
புரிய வேண்டிய சமயத்தில்,
புறக்கணித்துப் போகிறதே!
எதனால்?
அவள்-
என்னைப் பெற்றெடுத்து
சிலகாலம் பேணியதோடு,
முடிந்தது பணியென்று,
விட்டுச் சென்ற நாள் மட்டும்,
மனம் வெடித்துச் சிதறினேன்.
பத்தாம் நாள் காரியம் வரை,
விழிநீர் வழிய விம்மினேன்.
மாதங்கள் சில செல்லச் செல்ல,
எண்ணி எண்ணி, ஏங்கினேன்.
நினைவுநாள் வந்து போன பின்,
அவள் நினைவும்,
ஆண்டுக்கொருநாள் என்றானது.
அவள் இல்லாமலேயே,
உடலால் வளர்ந்தேன்.
அவள் சொல்லாமலேயே
உலகைப் புரிந்தேன்.
அவள் ஆசி மட்டும்
அருகில் இருக்க
இல்லறம் புகுந்தேன்.
"அம்மா!" என்றழைத்த, மழலைகள்,
வளர்ந்து நின்ற போது-
கருத்துடன் கற்ற பாடம்,
என்னை விட்டு விலகிப் போனது,
எப்படி?
நடந்து வந்த பாதை -
கண்ணைவிட்டு மறைந்து போனது.
எதனால்?
மனம் படபடவென்று
அடிக்கும் ஓசையில்,
எழுந்தது,
ஒரு கேள்வி,
எனக்குக் கேட்கிறது,
கவனமாய்க் கேளுங்கள் ,
உங்களில் ஒரு சிலருக்கும் கேட்கும்..
"எனக்கு ஏதாவது ஆனால்
என் குழந்தைகள் கதி என்ன ஆகும்"
என்ற அபத்தமான கேள்வி.
|