உளிகள் : ஓர் அனுபவக் குறிப்பு - தெடாவூர் அன்பு


- தெடாவூர் அன்பு

திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் B.Sc., கணிதம் படித்து கொண்டிருந்த காலம் அது. அப்போது நடந்த ஒரு நிகழ்வு.

எப்பொதுழும் நகைச்சுவை பேச்சுக்கள் அதிகம் நிறைந்தவர்கள் அதிகம் இருப்பதாலோ என்னவோ என் விடுதி அறை எப்போதும் நிறைந்து வழியும். அவ்வபோது சீரியசாகவும் பேச்சுப் போகும். எல்லோரும் தான் வளர்ந்த பிறகு என்னென்ன செய்யப் போகிறார்கள் என ஒரு பட்டியலே நீளும். நானும் நிறையக் கருத்துக்கள் கூறுவேன்.

சமூகத்தில் நாம் எப்போதும் மற்றவர்களுக்கு பயன்படும்படியாகத்தான் வாழவேண்டும் என அடிக்கடி என் நண்பர்களிடம் அரட்டை அடிப்பதும் உண்டு. என்னுடைய இந்த கருத்தை அமோதிக்காதவர்கள் யாருமே இல்லை...

இப்படியே என் கல்லூரி வாழ்க்கை ஓடிகொண்டே இருந்தது...

ஒரு நாள் திருச்சி மத்திய பேருந்து நிலையம் செல்ல திருச்சி அரசு மருத்துவமனை பேருந்து நிறுத்தத்தில் நானும் என் நண்பன்
முருகனும் (B.Sc-Botony) பேருந்துக்காகக் காத்துக் கொண்டிருந்தோம். அவன் வகுப்புத் தோழன் ஒருவன் அந்த வழியே வர முருகன் அவனிடம் பேசிகொண்டிருந்தான்.

நான் பேருந்து வருகிறதா என்பதிலேயே கவனமாக இருந்தேன்.

அப்போது ஒரு குரல் என் காலடி அருகே கேட்டது...

"தம்பீ, என் லுங்கியை கொஞ்சம் கட்டி விடரையா.. கெஞ்சி கேட்டுகறேன்.." - என்னைத்தான் அப்படி அழைத்தார் அவர்..

அவர் பார்க்கவே அருவெருப்பாக, அழுக்கு படிந்த உடையோடு, குஷ்ட நோய் கொண்டு, கைகளில் விரலே இல்லாமல்...
எனக்கு பார்க்கவே கூசியது.

அவ்வளவு அருவெருப்பு. என் நண்பன் இது எல்லாம் கவனிக்காமல் தன் நண்பனிடம் அரட்டையை தொடர்ந்துகொண்டே இருந்தான். நானும் ஒன்றும் தெரியாதவன் போல சற்று விலகி சென்றுவிட்டேன். ஒரிரு நிமிடங்கள் ஆகி இருக்கும். முருகன் எனை அழைப்பது கேட்டது.. திரும்பி பார்த்தேன்...

அங்கு..

தன் இரு கைகளாலும் அந்த குஷ்ட நோய் தாக்கி இருந்த மனிதரை பின்புறம் நின்று அனைத்து தூக்கிப்பிடித்திருந்தான்.. அவர் கிட்டத்தட்ட நிர்வாணமாய் இருந்தார்...

"வாடா அன்பு.. அந்த லுங்கியை கொஞ்சம் எடுத்துக் கட்டிவிடுடா.. சீக்கிரம்..." - ஓடிப்போய் கீழே கிடந்த அவரது லுங்கியை எடுத்துக் கட்டிவிடேன். அவரும் நன்றியோடு எங்களை பார்த்தார்.

"பாவம்டா அவரு.. நான் என் பிரண்டுகிட்ட பேசிக்கிட்டு இருந்தேன்ல. அதனால இவரை கவனிக்கலை. நீயும் பாவம் கவனிக்காம பஸ்சை பார்த்துக்கிட்டு இருந்திட்டே..."

என்ன மனசு இவனுக்கு...

"முருகா.. உனக்கு அந்த சீழ் வடியும் மனிதனைத் தொட அருவெருப்பா இல்லையா..?"

"முன்னெல்லாம் இருந்துச்சிடா.. இப்போல்லாம் கிடையாது.. நீதான்டா அடிக்கடி சொல்லுவ, மத்தவங்களுக்கு பயன்படும்படி வாழனம்னு. அதுல ஒரு சுகமும் இருக்குடா. நான் உனக்குத்தான் தேங்ஸ் சொல்லணும். இப்படி ஒரு எண்ணம் என் மனசுல வர உன் பேச்சுதான் காரணம் அன்பு.."

எனக்கு என்னவோ செய்தது.

"சாரிடா..."

"எதுக்கு சாரி..."

பதில் சொல்லாமல் நின்றேன்... சரியான பேருந்து இப்போது வந்தது... இனி போகவேண்டிய இடம் தெளிவாகத் தெரிந்தது.

Tamil English  
(tamil typing : ammaa = அம்மா, vikatan = விகடன்)
 Name
  E-Mail
  Comment
(குறிப்பு: தங்கள் கருத்து பதிவுக்கு நன்றி. நெறியாளர் பார்வைக்கு பிறகே பதிப்பிக்கப்படும். காத்திருக்கவும்)
For contents & Feedback: youthful@vikatan.com I For technical issues : webmaster@vikatan.com I For Advt: dotcom@vikatan.com
Copyright © 2008 Vikatan.com Pvt Ltd. all rights reserved.