- ப்ரியன்
இரட்டை கால்தடங்களை
எங்கு கண்டாலும்
மனம் நிரம்பிவிடுகிறது
கைக்கோர்த்து நாம் நின்றிருந்த
கணங்களால்!

மீன்கொத்திகளை
கேட்டிருக்கிறேன்;
உன் கண்கள்
கண்கொத்தி மீன்கள்!

தேவதைகளின்
உறைவிடம் விண் மட்டுமல்ல;
சில நேரங்களில்
எதிர் வீடும்!

உருண்டு திரண்டு
வழிய காத்திருக்கும்
உன் ஒற்றை கண்ணீர்துளியினுள்
உறைந்துவிடுகிறது என்னுலகம்!

கவிதை;
உன்னிதழ் சிந்தும்
எதுவும்!

நீ வழங்கிய
வலிகளுக்கு
ஈடாய்
என்னிடம் கவிதைகள்!

மச்சப்புள்ளிகளை இணைத்து
இறைவன்
இட்ட கோலம் நீ!

உன் முத்தத்தின்
ஈரத்தில்
காய்ந்துவிடுகிறது
என் காயம்!

சந்தித்த போது
படபடத்து கொண்டும்
பிரிந்திருக்கும் போது
பேசிக் கொண்டும்
நம் இதயங்கள்!

வா,
காதல் பூஜையில்
நம்மை பூவாய்
சமர்ப்பிப்போம்!
|