|
- ச.செந்தில்வேலன்
நீங்க அடுக்கு மாடிக் குடியிருப்பில் ஒரு வீடு வாங்கறீங்க.
அந்தக் குடியிருப்பில் பலர் ஒன்றோ, இரண்டோ கார்களை வைத்திருக்கிறார்கள். அக்கம் பக்கத்தில் உள்ளோர் கார்கள் வைத்திருப்பதைப் பார்த்து உங்களுக்கும் கார் வாங்கும் ஆசை வருகிறது.
அடுத்த நாள் குடியிருப்புச் சங்கக் கூட்டம் நடைபெறுகிறது. அதில் ஓர் அறிவிப்பு, "நமது அடுக்குமாடிக் குடியிருப்பில் கார்கள் நிறுத்த இடமில்லாததால், புதிதாக கார்களை வாங்குவோர் வெளியில் தான் நிறுத்த வேண்டும்," என்று.
உங்கள் மனநிலை எப்படி இருக்கும்?
பலர் ஒன்றுக்கும் மேலான கார்கள் வைத்திருக்கும் போது என் காரை நிறுத்த இடமில்லையா?
அண்மையில் நடைபெற்ற ஜி-8 மாநாட்டில் சுற்றுச்சூழல் தொடர்பான நிலை தான் மேலே குறிப்பிட்டுள்ள எடுத்துக்காட்டு!
அமெரிக்கா, மேற்கு ஐரோப்பிய நாடுகள், வளைகுடா நாடுகள் போன்ற வளர்ந்த நாடுகளை பல கார்களை வைத்திருப்போருடன் ஒப்பிடலாம். இந்தியா, சீனா, பிராசில் போன்ற வளரும் நாடுகளை கார் வாங்க விருப்பமுள்ளோருடன் ஒப்பிடலாம்.
உலக அளவில் சுற்றுச்சூழல் மாசடைந்து வருவதும், வெப்ப வாயுக்களின் தாக்கத்தால் பூமியின் தட்பவெப்பம் அதிகரித்து வருவதும் நாம் அறிந்ததே. திடீரென்று புயலும் வெள்ளமும் வருவதும், மழையே பெய்யாத இடங்களில் மழையும், வடதுருவத்தில் பனி உருகுவதுமாக இயற்கையில் சீற்றத்திற்கு இந்த சுற்றுச்சூழல் மாசடைவதே காரணம். சென்ற நூற்றாண்டில் பூமியில் தட்பவெப்பம் சராசரியாக ஒரு டிகிரி அதிகமாகயுள்ளது.
பூமியில் வெப்பத்தைக் கட்டுப்படுத்துவது எப்படி என்ற ஆலோசிக்க நடைபெற்றது தான் ஜி-8 மாநாடு!
இதில், வளர்ந்த நாடுகள் எல்லா நாடுகளும் வெப்ப வாயுக்கள் வெளியேற்றத்தைக் குறைக்க வேண்டும் என்று அறிவித்தது.
தொழில் முன்னேற்றமும், பொருளாதார முன்னேற்றம் நேரடியாக வெப்ப வாயுக்களுடன் தொடர்புடையது நாம் அறிந்ததே.
வளர்ந்த நாடுகள், சென்ற நூற்றாண்டு முழுவதும் போதுமான அளவு இயற்கை வளங்களை அழித்துவிட்டு இப்போது சட்டமிடுவதை இந்தியா போன்ற நாடுகள் வரவேற்கவில்லை.
இந்தியரின் சராசரி வெப்பவாயுக்களின் வெளியேற்றத்தை விட அமெரிக்கரின் வெளியேற்றம் 30 மடங்கு அதிகமாம். இந்த இடத்தில் அனைத்து நாடுகளுக்கும் ஒரே அளவு என்ற திட்டத்தைக் கொண்டு வருவது, 'தின்னது ஒருத்தன் காசழுவறது வேறொருத்தன்,' என்று தான் சொல்லத் தோன்றுகிறது!
இந்த நிலை உலக அரங்கில் மட்டும் தானா? இந்தியாவில் எப்படி உள்ளது?
உதாரணத்துக்கு மின்சாரத் தேவையை எடுத்துக்கொள்வோம்...
சென்னை போன்ற பெரு நகரின் மின்சாரத் தேவை தமிழக கிராமங்களின் மொத்த மின்சாரத் தேவையை விட அதிகமாம்!
முன்பு ஒரு தொலைக்காட்சிப் பெட்டி இருந்த இடத்தில் இப்போது இரண்டு. காத்தாடி மட்டும் போதும் என்ற நிலை மாறி A/C இல்லாத வீடுகளே இல்லை என்ற நிலை. இப்படியே நமது தேவை பெருகிக் கொண்டே செல்கிறது. கீழே உள்ள கேள்விகளுக்கு உங்கள் பதில் என்னவாக இருக்கும்?
* நீங்கள் அலைபேசி மின்னூட்டியின் (Charger) இணைப்பைத் துண்டிக்க மறந்ததுண்டா?
* வீட்டை விட்டு வெளியே வரும்போது காத்தாடி, குழல் விளக்கு போன்றவற்றை செயல்பாட்டில் விடுவதுண்டா?
* உங்கள் மின் சாதனங்களை Stand-by நிலையில் வைப்பதுண்டா?
இந்தக் கேள்விகளுக்கான பதில் 'ஆம்' என்றால் "சுற்றுச்சூழலைப் பற்றிப் பேச நமக்கு என்ன தகுதி இருக்கு?" என்று யோசிப்பது நல்லது!
நம் வீட்டில் A/Cயின் பயன்பாட்டை ஒரு மணி நேரம் குறைத்துக் கொண்டாலே கிராம வீட்டின் ஒரு நாள் மின்சாரத் தேவையைப் நிறைவேற்ற முடியுமாம்.
சென்னை போன்ற நகரவாசிகளின் அதிகப்படியான மின்சாரப் பயன்பாட்டால் கிராமங்களில் மின்வெட்டு வந்தால், கிராமவாசிகளும் தின்ன'ற'து ஒருத்தன் அழுவறது வேறொருத்தன் என்று தானே சொல்வார்கள்?
சிந்திப்போமா?
|