|
- ச.செந்தில்வேலன்
காலை எழுந்து உங்கள் வீட்டுக் கதவைத் திறக்கிறீர்கள். ஓர் அதிர்ச்சி! சந்தேகிக்கும்படியாக ஓர் அட்டைப்பெட்டி வீட்டின் முன்பு கிடக்கிறது. என்ன நினைப்பீர்கள்?
யார் அனுப்பி இருப்பார்கள்?
பேசும்படத்தில் கமல் அனுப்பும் அட்டைபெட்டி நினைவுக்கு வருகிறது!
ஏதாவது சூனிய வேலையாக இருக்குமோ என்றும் பயப்படுகிறீர்கள். சரி என்ன வேண்டுமானாலும் இருக்கட்டும் என்று திறக்கிறீர்கள்.
அருவருக்கத்தக்க வகையில் வீட்டுக் குப்பை அனைத்தும் அழகாக பெட்டியில் அடைக்கப்பட்டிருக்கிறது. இப்பொழுது என்ன செய்வீர்கள்? காவல் நிலையத்துக்கு செல்வீர்களா அல்லது "யார்டா போட்டது"னு கத்துவீர்களா?
இதுவே அந்தக் குடியிருப்புப் பகுதியின் பிரபலமானவர் தான் போட்டிருக்கிறார் என்று தெரிந்தால் என்ன செய்வீர்கள்?
ஓரிரு நாட்களுக்கு முன்பு பார்த்த செய்தியின் எடுத்துக்காட்டு தான் மேலே குறிப்பிட்டது.
இங்கிலாந்து நாட்டிலிருந்து பிராசிலுக்கு வந்திறங்கிய கப்பலை சோதனையிட்டவர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். காரணம், கப்பல் முழுவதும் இங்கிலாந்தின் கழிவுகள் அடைக்கப்பட்டிந்தது. ஒன்றல்ல இரண்டல்ல 1400 டன் அளவுக்கு கழிவுகள் வந்திறங்கியதாம். நம் வீட்டிலுள்ள எல்லா பொருள்களையும் சேர்த்தால் கூட 200 கிலோவைத் தாண்டாது.
மருத்துவமனைக் கழிவுகள், பயன்படுத்திய ஆணுறைகள், மின்னனுப் பொருள்களின் கழிவுகள், இதர குப்பைகள் என அதில் இருந்தனவாம். இது அனைத்தும் மறுசுழற்சிக்காக என்ற பெயரில் அனுப்பப்பட்டவை. இப்போது பிராசில் நாடு இங்கிலாந்திடம் கண்டனத்தை தெரிவிள்ளதாம்.
இது பிராசிலில் மட்டும் நடப்பதாக எண்ண வேண்டாம்.
இது போல கழிவுகளைக் கொட்டுவதற்கெனத் தேர்ந்தெடுக்கப்படும்(??) நாடுகளில் இந்தியாவுக்கு முதலிடமாம். அமெரிக்கா, ஐரோப்பா, மற்றும் இதர வளர்ந்த நாடுகளில் இருந்து மறு சுழற்சிக்காக என்ற பெயரில் ஆண்டுதோறும் பெருமளவில் மின்னனுக் கழிவுகள், இதர கழிவுகள் கொட்டப்படுகிறதாம்.
இது போன்ற மின்னணுக் கழிவுகளில் இருந்து பாகங்களை பிரிப்பது மற்றும் சுத்தப்படுத்துவது என மும்பையின் சேரிப் பகுதியான தாரவி போன்ற இடங்களில் நடக்கிறதாம்.
சென்னையின் குப்பைக்கு எப்படி பெருங்குடியோ அது போல வளர்ந்த நாடுகளுக்கு இந்தியா என்பதை நினைத்துப் பார்க்க முடிகிறதா?
இதற்கு என்ன காரணம்?
நம் நாட்டின் சட்டங்களில் இருக்கு ஓட்டை என்று கூறினாலும், வளர்ந்த நாடுகளில் இருக்கும் மின்னணு இயந்திரங்களைப் பயன்படுத்தும் போக்கு தான் மூலக்காரணம்.
புதிதாக அலைபேசி, தொலைக்காட்சிப்பெட்டி, கணினி என எந்த வகையாக பொருளாக இருந்தாலும் வாங்கியாக வேண்டும் என்ற மனநிலை. தற்பொழுது பயன்படுத்தும் பொருளை என்ன செய்வது? பயன்படுத்தப்பட்ட பொருள்கள் தான் இப்படி வளரும் நாடுகளை குப்பையாக்குகின்றன.
இந்தப் போக்கு இப்பொழுது நம் நாட்டிலும் வளர்ந்து வருகிறது. நாம் குப்பையை அதிகரிக்காமல் இருக்க என்ன செய்ய முடியும்?
பொருளை குப்பையில் போடுவதற்கு முன்பாக யாருக்காவது தேவையிருக்கிறதா என்று யோசிக்கலாம்.
ஒலிப்பேழைகள் (CD) என்றால் பக்கத்தில் இருக்கும் நூலத்திலோ அல்லது நண்பர்களுக்கோ கொடுக்கலாம்.
மறுசுழற்சிக்கென்று வைத்திருக்கும் இடங்களில் பொருட்களை கொடுக்கலாம்.
சர்வதேச அளவில், தேச அளவில் நம்மால் எதுவும் செய்யமுடியவில்லை என்றாலும் நம் அளவில் நாட்டைக் குப்பைமேடாக மாற்றாமல் பார்த்துக் கொண்டால் நல்லது தானே!
|