|
- ச.செந்தில்வேலன்
எல்லா நல்லுள்ளங்களுக்கும் வணக்கமுங்க!!
எங்க இனத்துக்காக ஒரு கடுதாசி எழுதனும்னு ரொம்ப நாளா நினைச்சுட்டிருந்தேங்க.
முந்தாநேத்து மசினகுடி காட்டுக்குள்ள மேய்ஞ்சுட்டு இருக்கறப்ப மேதாவி நண்பன் சொன்னது திக்குனு இருந்ததுங்க. ஊர்ப்பக்கம் எங்க இனத்தைப் பத்தி நெறயாத் தப்பான சேதி வருதுன்னு சொன்னானுங்க, அந்தக் குரங்கு நண்பன். என்ன தான் சொல்லுங்க மேதாவிக சொன்னா சரியாத் தாங்க இருக்கும்? எங்களுக்கு, உங்கள மாதிரி ஆறறிவு இல்லாததால எங்க தரப்பு நியாயத்தக் கேக்கணும்னு உங்களுக்கு தோணாது இல்லீங்களா... அதுக்குத் தாங்க இந்த கடுதாசி.
ஐயா, ரெண்டு வாரமா எங்க சாதிசனம் தேயிலைக் காட்டுக்குள்ள வந்துட்டோம்னு ரொம்ப குறைப்பட்டுக்கறீகலாம். ஆனா அதெல்லாமே எங்க வூடு தான்னு சொன்னா யாராவது கேக்கவா போறாங்க?
ஐயா உங்களுக்கு ஒரு உண்மை தெரியும்களா?
இன்னிக்கு தேயிலைத் தோட்டமா இருக்கற காடுக எல்லாமே ஒரு காலத்துல எங்க வூடா இருந்துச்சுங்க. நாங்க இலை தழை தேடீட்டு கூடலூர்க் காட்டுல இருந்து அப்படியே தர்மபுரிக் காடு வரைக்கும் போயிட்டு வந்து பாத்தா எங்க காடெல்லாம் தேயிலைக்காடா மாறீடுதுங்க.சரி, பாவம் உங்களுக்கு சோறு போடறதே அந்த தேயிலைத் தோட்டம் தானன்னு நாங்களும் உங்க இடத்துக்கு வர்றதில்லைங்க.
எங்க பசியாறனும்னா, ஒரு நாளுக்கு தோராயமா 250 கிலோக்கு திங்கனும்ங்க. இலை தழை, மூங்கில் குச்சி, மரப்பட்டை எல்லாந்தானுங்க எங்களுக்கு சோறு. அப்ப எங்க கூட்டத்தோட நாங்க வாழனும்னா எங்களுக்கு எத்தாப் பெரிய காடு வேணும்னு நீங்களே சொல்லுங்க!
அந்தக் காட்டுல மேஞ்சு ஒரு மாசமாச்சு அங்க போலாம்னு போனா ஒன்னு காட்டை எல்லாம் எரிச்சிடறாங்க, இல்லன்னு கம்பி வேலி போட்டுடறாங்க. அப்புறம் நாங்க என்னங்க பண்ணுவோம்? இப்படித் தாங்க பசி அதிகமாகி நாங்க தேயிலைத் தோட்டத்துக்குள்ள வந்துட்டோம். ஆனா உங்க பொழப்புல மண்ணப் போடனும்னு நாங்க மனசார கூட நெனச்சது இல்லீங்க!
இப்படித்தாங்க இலை தழை தேடீட்டு, எங்க சித்தப்பனூட்டுத் தம்பி குடும்பத்தோட வழிதெரியாம வந்துட்டானுங்க வாளையார்க் காட்டுப்பக்கம். ஏதோ ரயில் தண்டவாளமாம், அதுல போய் மாட்டிக்கிட்டாங்களாம் அவன் சம்சாரமும் குழந்தையும். சொல்லவே நாக்கு தழுதழுக்குதுங்க, அவன் சம்சாரம் மாசமா வேற இருந்துச்சாம். அவன் அழுத அழுகை இருக்கே.. காடே அலறீருச்சுங்க. இப்படி இந்த ரயில் தண்டவாளத்துல அடிபட்டு மட்டும் எங்க சனத்துல இருந்து 8 பேர் இறந்துட்டாங்கங்க.
இது இப்படீன்னா, எங்களப் பாக்கறதுக்காக வர்ற பயலுக பண்றத சொல்ல முடியலங்க. இவனுக குடிக்கற பாட்டிலு, திண்ணு போடற பிளாஸ்டிக்னு அட்டகாசம் தாங்க முடியலங்க. எங்களுக்கு தான் உங்கள மாதிரி ஆறறிவு இல்லீங்களே!
இலை தழையோட நீங்க கொழுப்பெடுத்துப் போட்ட பிளாஸ்டிக்க முழுங்கீட்டோம்னா அவ்ளோ தாங்க!
உங்களுக்கெல்லாம் காப்பீடு கீப்பீடெல்லாம் இருக்கு, எங்களுக்கு என்னங்க இருக்கு?
எங்க காட்டுப்பக்கம் வந்த வானம்பாடி ஒன்னு கிட்ட இந்தக் கதையெல்லாஞ் சொன்னனுங்க. அந்த வானம்பாடி சொல்றபடி பாத்த இது ஏதோ நம்மூர்ல மட்டுமில்லியாமாங்க. ஆப்பிரிக்கா, ஆசிய நாடுகனு எல்லாப் பக்கமும் எங்களக் கொல்றதுலயே குறிக்கோளா இருக்காங்களாம். நூறு வருசத்துல எங்க சாதிசனத்துல 10 லட்சம் பேரக் கொன்னு சாய்ச்சுட்டீங்களாம்.
இப்படியே போச்சுன்னா, நீங்க எங்கள ஊட்டி போகும்போதோ, முதுமலைக் காட்டுலயோ, உடுமலை வழியா மூணார் போகும் போதோ, ஆனைமலைக் காட்டுலயோ, வால்பாறையிலோ எல்லாம் பாக்க முடியாதுங்க. ஏதோ கிண்டிப்பூங்கா, வண்டலூர்னு ஊருக்கு ஒன்னாத் தாங்க பாக்கனும். என்னாதாஞ் சொல்லுங்க அது அது இருக்க வேண்டிய இடத்துல இருந்தாத் தாங்க நல்லது.
உங்கள மாதிரி எங்களுக்கும் புள்ள குட்டியோட வூட்டுல வாழத்தாங்க ஆசையா இருக்கும்?
ஏதோ என் மனசுல பட்டத எல்லாம் இந்தக் கடுதாசில கொட்டீட்டேங்க.
என்னடா இந்த யானை சொல்றத எல்லாம் கேக்கனுமான்னு நினைச்சீங்கன்னா, உங்களப் பத்தி எனக்கு சொல்றதுக்கு ஒன்னுமில்லீங்க. நீங்க புள்ள குட்டியோட நல்லா இருங்க. ஐயோ பாவம்டா இந்த யானைகனு நினைச்சீங்கன்னா இந்தக் கடுதாசிய உங்க நண்பர்களுக்கெல்லாம் அனுப்புங்க!
நீங்க என்ன நெனச்சாலும் உங்கள வரவேற்க நாங்க காட்டுல காத்துட்டே இருப்பமுங்க. மறக்காம எங்களப் பாக்க வாங்க. முகவரி தெரியுந்தானுங்க?
வர்றனுங்க!
முதுமலைக் காட்டுல இருந்து,
யானைமுகன்.
|