|
- சுபானு
மலர்களின் அழகு பிடிக்கும்
அவற்றில் கிறங்கிப்போக இன்னும் பிடிக்கும்...
மலர்களுக்குள்ளே அனிச்சம் பூ இன்னும் பிடிக்கும்,
மலர்களுக்கு நடுவே அனிச்சம் பூ எப்படியிருக்குமோ...
அப்படியிருப்பாள் மங்கையருக்குள்ளே எனக்குரியவளும்...
மென்மையின் இலக்கணமே அவளது பெண்மை..!

எப்போதும் எதையோ தேடுவது போல துரு துருவென
சுழன்று கொண்டிருக்கும் அவள் இரு கண்கள்...
அவள் உதடு சிரிக்கும் முன்னர்
சிவந்து சிரித்துவிடும் கன்னக்குழிகள்...
காணக் கிடைக்கதா மகரதச் சிவப்பில் சிவந்து ஜொலிக்கும்
அவளின் சிறு உதடு...
அப்பப்பா இன்னும் இன்னும்
வர்ணித்துக் கொண்டே போகலாம் அவளின்
சொக்கவைக்கும் சொரூபத்தை
அவளின் வருகைக்காக இந்தப் பித்தனின்
மனம் தினம் ஏங்கும்.. அன்றும் வந்தாள்...
ஒரு மென்மஞ்சள் சுடிதாரில்!
மெல்ல என் சைக்கிள், விலகி
அவளுக்காக இடம் தந்தன அந்த - கணிதபாட
பிரத்தியேக வகுப்பறையின் வாசலோரத்தில்...
அவளை விட்டு அகலாத என் இரு கண்கள்
தன்னையே பார்ப்பதை உணர்ந்து மெல்ல நாணித்
தலைகுனிந்தன அவள் பார்வைகள்..!
எங்கே தொட்டு விடுவேனோ என எண்ணி
அவள் சைக்கிள் கைப்பிடிகள்
கூட மறுபக்கம் சாய்ந்து கொண்டன வெட்கத்தில்..!
கம்பன் வீட்டுக் கட்டுத் தறியும் கவிபாடும்
எனக் கேட்டதுண்டு - அன்று அவள்
சைக்கிளைப் பார்த்த பின் உணர்ந்தேன்
அவள் சைக்கிளிற்கும் வெட்கங்கள்
ஒட்டிக் கொண்ட இரகசியத்தை..!
கையிலெடுத்த நோட்டுப் புத்தகத்துடன்
வகுப்பறை வரை பின்தொடர்ந்தேன்.
அந்தப் பிரபஞ்ச வெளியில் புதிதாக
இரு நட்சத்திரமென நாம் உள்நுழைய...
ஒரு 'ஓ' போட்டு வரவேற்றார்கள் எம் நண்பர்கள்...
எண்கணிதம் கரும்திரையில்
காதல் கணிதம் எம் மனத்திரையில்...
ஏதேதோ கற்பனையில் ஆழ்ந்திருந்த
என்னை - ஆசிரியரின் கேள்விகள்
எழுந்து நிற்கச்செய்யவும் - அவற்றிற்கு
விடைதெரியாது நான் அவளைப் பார்க்க
கண்களால் தன் நோட்டுப் புத்தகத்தினைச் சுட்டி
விடையைத் திருடச் சொன்ன கள்ளி அவள்...
கண்களால் திருடுதல் என்பதனை எனக்கு
கற்றுக் கொடுத்த கள்ளி அவள் - என் இதயத் திருடி அவள்..!
என் இதய வீட்டில் நித்திய
சிம்மாசனமிட்ட மகாராணி அந்தத்திருடி..
ஆனால் இன்றுவரை நாம்
பேசிக்கொள்ளவேயில்லை...
ஆனாலும் இன்றும் அதே நாணம் கலந்த
சின்னச் சிரிப்பு... காரணம்...?
|