- தங்கராசா ஜீவராஜ்

விழிபிதுங்கி இருக்கிறேன் - என்
எண்ணங்களை
எழுத்துருவாக்கும் வழி தெரியாது
சந்தங்கள், அர்த்தங்கள் தவிர்த்து
நிறைய
யோசிக்கவேண்டி இருக்கிறது
எழுதத் தொடங்கும் ஒவ்வொரு கணமும்
ஆயிரம் கண்கள் - என் எழுத்தை
வெறித்துப் பார்ப்பதாய் ஒரு பிரமை
எப்படி வரும்?
ஈட்டிகளுக்கு நடுவில்
இயல்பான கவிதை
நாட்டு நடப்புகளை
எழுதத் தொடங்கையில்
வரண்டு கொள்கிறது – நா
நெஞ்சில் பொறுத்திருக்கிறது
எழுதி முடித்ததும்
இருப்பேனா? என்ற பயம்
பக்கங்கள் நிரப்புவது தவிர்த்து
என்ன சாதித்துவிட முடியும்
இருப்பதை எழுதாமல்
வெறுத்துப் போய்
எழுந்து சென்றேன்முடிந்திருந்தது பூசை
பூட்டிய கோயிலுக்குள் பிள்ளையார்
சலித்துப் போய் விசாரித்ததில்
திறந்திருந்தால்
திருடர் பயம் என்றார்கள்
கடவுளே என்று
எட்ட நின்று கும்பிடுகையில்
கைதாகி இருக்கும் ஒருவரிடம் - என்
ஆன்ம விடுதலைக்காய்
வேண்டுவது போல் இருக்கிறது.
எழுத்துக்கு மட்டுமல்ல –
என்னைப் பொறுத்தமட்டில்
எல்லாவற்றுக்கும்
தேவைப்படுவது போல் இருக்கிறது
சுதந்திரம்.