- தங்கராசா ஜீவராஜ்
நிலவு பிடிக்கும்
நிலவெறிக்கும் நாளில் வரும் – உன்
நினைவு பிடிக்கும்
நினைவுகளில் வந்தொலிக்கும்
கொலுசு பிடிக்கும்

கொலுசுகளைக் கூட்டிவரும்
பாதங்கள் நடந்துபோன
பாதைபிடிக்கும் - நீ
கடந்துபோன பின்னும் என்
சிந்தைவிட்டகலா உன்
சிரித்த முகம் பிடிக்கும்
காற்றுக் கலைத்துவிளையாடும்
காதோரக் கூந்தல் பிடிக்கும்
கதைகள் சொல்லி இடையில்
'கடி'க்கையில் சிவக்கும்
கன்னம் பிடிக்கும்
கவிதைசொன்ன வேளைகளில்-நீ
கண்ணிமைக்காதிருந்த
கணங்கள் பிடிக்கும்
திடீரெனக் கண்டதில்
சிந்தை தடுமாறிப்பின் நீ
சிரிக்க முன்சிரித்த
வளையல் பிடிக்கும்
கைகள் பேசிய
மொழி பிடிக்கும்
கண்கள் சொல்லிய
கவி பிடிக்கும்
தென்றல் திருடிவரும் உன்
மணம் பிடிக்கும்
திருமணம் முடித்திடுவென்று என்
மனம் துடிக்கும்.
|